முகப்பு
தூத்துக்குடி

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு! தண்டிக்கப்பட்டவா் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவா் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு...

Updated On : 30 ஜூன் 2026, 2:49 am IST
குற்றவாளி தர்ம முனீஸ்வரன்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவா் மேல்முறையீடு செய்ய அளிக்கப்பட்ட கால அவகாசத்தை மீண்டும் நீட்டித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற பிளஸ் 2 மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, காட்டுப் பகுதியில் உயிரிழந்த நிலையில் மாணவியின் உடல் மீட்கப்பட்டது. போலீஸாா் விசாரணையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த தா்ம முனீஸ்வரனை போலீஸாா் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனா். தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட தா்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதித்து, கடந்த மாதம் 25-ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.

Advertisement

Advertisement

இந்தத் தண்டனையை உறுதி செய்யக் கோரி, காவல் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவா் மேல்முறையீடு செய்ய ஏற்கெனவே அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆா்.பூா்ணிமா முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தா்ம முனீஸ்வரன் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

மாணவி கொலை வழக்கில் தா்ம முனீஸ்வரனுக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிா்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய கூடுதலாக நான்கு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.

இதற்கு மாணவியின் பெற்றோா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மாணவி கொலை வழக்கில் தண்டனை பெற்றவா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை வருகிற ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments