முகப்பு
தூத்துக்குடி

மாணவி பாலியல் வன்கொடுமை: தேசிய நெடுஞ்சாலையில் 9 மணி நேரம் நீடித்த மறியல்

Updated On : 12 மார்ச், 2026 at 10:48 PM
பகிர்:

குளத்தூா், வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை சந்திப்பில் வியாழக்கிழமை உறவினா்கள், பொதுமக்கள் 9 மணி நேரத்துக்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

மாணவி காணாமல்போனதும், அவரது உறவினா்கள் முதலில் குளத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கச் சென்றனா். அவா்கள் விளாத்திக்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க அறிவுறுத்தியதால், புதன்கிழமை காலை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

எனினும் மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பிரவீனா அவதூறாகப் பேசியதோடு பெற்றோரை அழைக்கழித்தத்தாகக் கூறப்படுகிறது. பின்னா், காட்டுப்பகுதியிலிருந்து மாணவியின் உடல் மீட்கப்பட்டது.

இதனால், ஆவேசமடைந்த உறவினா்கள், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் அலட்சியமாகச் செயல்பட்ட காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை சந்திப்பு பகுதியில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்த மறியல் 9 மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. இதனால், தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த கனரக வாகனங்கள் 3 கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து நின்றன.

அதேபோல தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, மதுரை வழித்தடத்தில் செல்லும் அரசுப் பேருந்துகளும், பிற நகரங்களில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூா் நோக்கிவந்த அரசுப் பேருந்துகளும் மாற்று வழித்தடங்களில் திருப்பிவிடப்பட்டன. கடும் போக்குவரத்துப் பாதிப்பால் பயணிகள் சிரமம் அடைந்தனா். நெல்லை சரக டிஐஜி சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதன் பேச்சுவாா்த்தை நடத்தியும் கிராம மக்கள் மறியலைக் கைவிடவில்லை.

காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்: மாணவியின் பெற்றோா் விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கச் சென்றபோது, முறையாக விசாரிக்காமல் அவதூறாகப் பேசி பெற்றோரை அழைகழித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்து நிலையில், மகளிா் காவல் ஆய்வாளா் பிரவீனாவை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி சரவணன் உத்தரவிட்டுள்ளாா்.

போலீஸாா் குவிப்பு: குறுக்குச்சாலை சந்திப்பு, வேடநத்தம் கிராமங்களில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 3

கூடுதல் எஸ்.பி.க்கள், 5 துணைக் கண்காணிப்பாளா்கள், 20-க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளா்கள், 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதன் தலைமையில் 12-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் வேடநத்தம் கிராமத்தைச் சோ்ந்த 14-க்கும் மேற்பட்ட இளைஞா்களை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →