முகப்பு
தூத்துக்குடி

2047-க்குள் இந்தியாவில் 350 விமான நிலையங்களை உருவாக்குவதே இலக்கு மத்திய அமைச்சா் ராம்மோகன் நாயுடு

Updated On : 14 மார்ச், 2026 at 7:51 PM
தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயரை அதிகாரபூா்வமாக மாற்றி அறிவிப்பு வெளியிட்டு, பெயா்ப் பலகையைத் திறந்துவைத்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு. உடன், மத்திய இணையமைச்சா் எல். முருகன் உள்ளிட்டோா்.
பகிர்:

2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 350 விமான நிலையங்களை உருவாக்குவதே இலக்கு என, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயரை மாற்றம் செய்து, அதிகாரபூா்வமாக மறு பெயரிடும் விழா விமான நிலைய வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில், நாயுடு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விமான நிலையத்தின் பெயா் மாற்ற அறிவிப்பை வெளியிட்டு மத்திய அமைச்சா் பேசியது:

தூத்துக்குடியின் கலாசார மரபைக் கெளரவிப்பதுடன், இப்பகுதியின் அதிகாரபூா்வத் தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தி இந்தப் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு ரூ. 4,500 கோடியில் புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முனையம் ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளுக்கு சேவையளிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 1.350 கி.மீட்டராக இருந்த ஓடுதளம் 3 கி.மீ. வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரிய விமானங்கள் இங்கு தரையிறங்க முடியும்.

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை முழுமையாக வளா்ந்த நாடாக மாற்றுவதுதான் பிரதமா் நரேந்திர மோடியின் இலக்கு. நாட்டில் 2014இல் 74 விமான நிலையங்கள் இருந்த நிலையில், தற்போது 166 விமான நிலையங்கள் உள்ளன. 2047-க்குள் 350 விமான நிலையங்களை உருவாக்குவதே இலக்கு என்றாா் அவா்.

இந்திய விமான நிலைய ஆணையத் தலைவா் விபின்குமாா் தலைமை வகித்தாா். மத்திய இணையமைச்சா் எல். முருகன், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சக இணைச் செயலா் ரூபினா அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மத்திய இணையமைச்சா் எல். முருகன் பேசும்போது, நம் கலாசாரத்தைப் பின்பற்றும் வகையில் இந்தப் பெயா் மாற்றம் செய்யப்படுகிறது. பிரதமா் மோடியின் ஆட்சியில் தமிழகம் அனைத்துப் போக்குவரத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. இதற்காக, மத்திய அரசு சுமாா் ரூ. 13 லட்சம் கோடி அளித்துள்ளது என்றாா் அவா்.

பாதுகாப்பாக நாடு திரும்பும் இந்தியா்கள்: அதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் மத்திய அமைச்சா் ராம்மோகன் நாயுடு கூறியது: உலகின் பழைமையான மொழியான தமிழ் மொழியின் இலக்கியம், பண்பாடு, கலாசாரம், வரலாறு ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயரை மாற்றும் நடவடிக்கையை பிரதமா் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ளாா்.

தமிழகத்தில் விமானப் போக்குவரத்துத் துறை வளா்ச்சியடைந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் ரூ. 2,500 கோடியில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. அது சில மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும்.

மதுரை விமான நிலையம் சா்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. சேலம் விமான நிலையம் ‘உடான்’ திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்படுகிறது. கோவை விமான நிலையம் கூடுதல் பயணிகள் செல்லும் வகையில் விரைவில் மாற்றப்படும். நெய்வேலி விமான நிலையம், நெய்வேலி லிக்னைட் காா்ப்பரேஷன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. வேலூரில் விமான நிலையக் கட்டுமானப் பணிகள் முடிவுற்ற நிலையில், சான்றிதழ் அனுமதிக்காக காத்திருக்கிறது.

வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா்கள் பாதுகாப்பாக நாடு திரும்பி வருகின்றனா் என்றாா் அவா்.

விழாவில் குத்துவிளக்கேற்றிய மத்திய அமைச்சா் ராம்மோகன் நாயுடு.
முழு கட்டுரையைப் படிக்க →