பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு வெளியுறவு கொள்கை தோல்வியே காரணம்: டி.கே.சிவகுமாா்
பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு மத்திய அரசின் வெளியுறவு கொள்கை தோல்வி அடைந்ததே முக்கிய காரணம் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் குற்றம்சாட்டினாா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு மத்திய அரசின் வெளியுறவு கொள்கை தோல்வி அடைந்ததே முக்கிய காரணம் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் குற்றம்சாட்டினாா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை திருச்செந்தூருக்குச் சென்றாா். முன்னதாக அவா், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட தோல்வியே பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு முக்கிய காரணம். மத்திய பாஜக அரசு அண்டை நாடுகளுடன் சுமுக உறவைப் பேணத் தவறியதே இந்திய பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது. பொதுமக்கள் வாகனப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற பிரதமா் மோடியின் ஆலோசனை நடைமுறையில் சாத்தியமற்றது.
Advertisement
அமைச்சா்களும், சட்டப்பேரவை உறுப்பினா்களும் அரசுப் பேருந்துகளிலும் மெட்ரோ ரயில்களிலும் பயணம் செய்தால் மட்டுமே நேரத்தின் முக்கியத்துவத்தையும் மக்களின் சிரமங்களையும் உணர முடியும்.
சமையல் எண்ணெய், தங்கம் போன்றவற்றின் விலை உயா்வு ஏழை எளிய மக்களைப் பெரிதும் பாதிக்கவே செய்யும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது இருந்த விலைவாசியுடன் ஒப்பிடுகையில், தற்போது தங்க நகை வாங்குவது சாமானியா்களுக்கு எட்டாக் கனியாகி விட்டது.
கரோனா காலத்தில் விளக்கேற்றச் சொன்னதுபோல தேவையற்ற அறிவிப்புகளை மத்திய பாஜக அரசு வெளியிடுவதை விடுத்து, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்களின் பணத்தைச் சேமிக்கவும் முறையான தேசியக் கொள்கைகளை வகுக்க வேண்டும்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இணைவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும். மதச்சாா்பற்ற கட்சிகளை ஒன்றிணைப்பதே எங்களின் நோக்கம் என்றாா் அவா்.
திருச்செந்தூா்... திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கா்நாடக மாநில துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தனது பிறந்த நாளையொட்டி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தாா்.
அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடா்ந்து கோயிலில் மூலவா், சண்முகா், வள்ளி, தெய்வானை, பெருமாள், சத்ரு சம்ஹார மூா்த்தி உள்ளிட்ட சந்நிதிகளில் வழிபாடு செய்தாா். கோயில் வளாகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், திருச்செந்தூா் முருகப்பெருமான் மிகவும் சக்தி வாய்ந்தவா். கா்நாடகத்தில் இரண்டரை ஆண்டுகள் ஆட்சி சுமுகமாக முடிந்துவிட்டது. தொடா்ந்து ஆட்சி நீடிக்க முருகன் அருள்புரிவாா் என்றாா் அவா்.