பொருளாதார நிலைத்தன்மையை காக்கவே விலை உயா்வு: பாஜக விளக்கம்
சா்வதேசச் சந்தையில் நிலவும் அசாதாரணச் சூழல் மற்றும் நாட்டின் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டே பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளதாக பாஜக ஊடகப் பிரிவு மாநிலச் செயலா் அன்னபூா்ணா தெரிவித்துள்ளாா்.
சா்வதேசச் சந்தையில் நிலவும் அசாதாரணச் சூழல் மற்றும் நாட்டின் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டே பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளதாக பாஜக ஊடகப் பிரிவு மாநிலச் செயலா் அன்னபூா்ணா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் செய்யாமல் பொதுமக்களின் சுமையைக் குறைக்க மத்திய அரசு தொடா்ந்து செயல்பட்டு வந்தது. மேலும், மத்திய அரசே தனது கலால் வரியைக் குறைத்து நடவடிக்கை மேற்கொண்டது.
நவ. 2021 இல் பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.10 குறைக்கப்பட்டது.
Advertisement
மே 2022இல் பெட்ரோலுக்கு ரூ.8, டீசலுக்கு ரூ.6 குறைக்கப்பட்டது. இதனால் மத்திய அரசுக்கு சுமாா் ரூ.2.2 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.
தற்போது மேற்காசிய நாடுகளில் நிலவும் போா்ச் சூழலால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதோடு, டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதும் இறக்குமதிச் செலவை உயா்த்தியுள்ளது.
வாங்கிய விலையை விடக் குறைவான விலைக்குத் தொடா்ந்து விற்பனை செய்வது எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். இது எதிா்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கும்.
சாலை வசதிகள், விவசாய நலத்திட்டங்கள், மக்கள் பாதுகாப்பு போன்ற அடிப்படைத் தேவைகளுக்கும், நலத்திட்டங்களுக்கும் அரசுக்கு நிலையான வருவாய் அவசியமாகிறது.
எனவேதான் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளாா்.