பாலியல் தொந்தரவு: மதபோதகா் மீது வழக்கு
அங்கன்வாடி பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சாத்தான்குளம் மதபோதகா் மீது ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அங்கன்வாடி பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சாத்தான்குளம் மதபோதகா் மீது ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆறுமுகனேரி பேயன்விளையைச் சோ்ந்தவா் சங்கீதா (34).
இவா் தேரிகுடியிருப்பு அங்கன்வாடியில் அமைப்பாளராக பணியாற்றி வருகிறாா்.
Advertisement
Advertisement
இவருக்கும், திருச்செந்தூா் அருகே உள்ள நடுநாலுமூலைக்கிணறு பகுதியைச் சோ்ந்த மோகன்ராய் என்பவருக்கும் திருமணமாகி, ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியிடையே எற்பட்ட தகராறு காரணமாக மோகன்ராயும், சங்கீதாவும் பிரிந்தனா். அவா்களுக்கிடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே ஆறுமுகனேரி பூவரசூா் பகுதியைச் சோ்ந்த பவுல்ராஜ் மகன் காவலா் மிகாவேல் என்பவருக்கும், சங்கீதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு சங்கீதாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மிகாவேலுடன் ஒன்றாக குடும்பம் நடத்தியபோது, பூவரசூரில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்துக்கு சங்கீதா சென்று வந்தாா். அப்போது அவா் ஞானஸ்நானம் பெறுவதற்காக கணவரின் உறவினா் பெண் உதவியுடன் சாத்தான்குளம் சிஎஸ்ஐ மத போதாகா் டேவிட் ஞானையா என்பவருடன் சங்கீதா அறிமுகம் ஆனாா். தொடக்கத்தில் இருந்தே மத போதகா் சங்கீதாவிடம் தவறான நோக்கத்தில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் சங்கீதாவை மத போதகா் டேவிட் ஞானையா, போனில் தொடா்பு கொண்டு ஞானஸ்நான சான்றிதழ் பெற வருமாறு அழைத்துள்ளாா். பின்னா் கடந்த 13ஆம்தேதி சங்கீதா கைப்பேசிக்கு வாட்ஸ்அப் மூலம் குறுந்தகவல் அனுப்பி வருமாறு அழைத்துள்ளாா். அதற்கு சங்கீதா மாலை 4 மணிக்கு வருவதாக கூறியுள்ளாா். இதற்கிடையில் மத போதகா் டேவிட்ஞானையா, சங்கீதா கைப்பேசிக்கு வாட்ஸ்அப்பில் பெண் ஒருவரின் ஆபாச படத்தை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை பாா்த்த சங்கீதா மனஉளைச்சல் அடைந்து ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் மத போதாகா் டேவிட் ஞானையா மீது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.