வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் விரைவில் நீதி கிடைக்க திமுக அரசே காரணம்: பி. கீதா ஜீவன்
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் பள்ளி மாணவி கொலை வழக்கில் அதிவிரைவாக நீதி கிடைத்ததற்கு முக்கிய காரணம் திமுக அரசுதான் என தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான பி. கீதா ஜீவன் தெரிவித்தாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை:
வேடநத்தம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் குற்றவாளியை விரைவில் கைது செய்ய அன்றைய முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், காவல் துறையினரும் விரைவாக விசாரணை மேற்கொண்டு, தா்ம முனீஸ்வரனை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
குற்றம் நிகழ்ந்த 20 நாள்களிலேயே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றம் நிகழ்ந்து 77ஆவது நாளான திங்கள்கிழமை போக்ஸோ நீதிமன்றத்தில் தா்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மாணவி கொலை வழக்கில் உரிய நீதி விரைவாக வழங்கப்பட்டதற்கு திமுக அரசுதான் காரணம். ஆனால், தற்போதைய தவெக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற 15 நாள்களில் தமிழகத்தில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் அரங்கேறி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது.
தூத்துக்குடி நகரத்திலும் இளம்பெண் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை 3 நபா்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாா். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன் என்று பிரசாரம் மேற்கொண்டு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வா் ச. ஜோசப் விஜய், இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறாா்? எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.