முகப்பு
திருச்சி

எடைக் குறைபாடுள்ள குழந்தைகளின் உயர் சிகிச்சைக்கு ஏற்பாடு

 திருவாரூர், ஆக. 7: திருவாரூர் மாவட்டத்தில் எடைக் குறைபாடுள்ள 3 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் உயர் சிகிச்சைக்கு மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் ஏற்பாடு செய்துள்ளார்.  திருவாரூர் மாவட்டத

Updated On : 20 செப்டம்பர், 2012 at 1:37 PM
பகிர்:
Updated On : 26 டிசம்பர், 2023 at 12:16 PM

 திருவாரூர், ஆக. 7: திருவாரூர் மாவட்டத்தில் எடைக் குறைபாடுள்ள 3 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் உயர் சிகிச்சைக்கு மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் ஏற்பாடு செய்துள்ளார்.

 திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று கர்ப்பிணிகளுக்கும் வழங்கப்படுகின்றன.

 திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், மாவட்டம் முழுவதும் உள்ள ஊட்டச்சத்து மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலம் 3 வயதுக்குட்பட்ட 28,000 குழந்தைகளின் எடை அளவு மாதந்தோறும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதில் 24 குழந்தைகள் மிகவும் எடை குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்த ஆய்வறிக்கையை ஊட்டச்சத்து திட்ட அலுவலர் பி. ஜெயராணி மாவட்ட ஆட்சியருக்கு அளித்தார்.

Advertisement

 குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையிலும், உரிய எடை இல்லாததால் இந்தக் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனை மூலம் எடை குறைவுக்கான காரணத்தை கண்டறிய ஆட்சியர் எம். சந்திரசேகரன் விரும்பினார். இதற்காக சுகாதாரத் துறை உதவியோடு சிறப்பு மருத்துவ முகாமை நடத்த அறிவுறுத்தினர்.

 இதனடிப்டையில், திருவாரூர் விஜயபுரம் தாய், சேய் நல மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடத்தப்பட்டது.

 முகாமில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் 4 பேர் பங்கேற்று 20 குழந்தைகளை பரிசோதனை செய்து, அறிக்கை அளித்தனர்.

 இதுகுறித்து இந்திய குழந்தை மருத்துவர்கள் சங்க தமிழ்நாடு கிளைத் தலைவர் டாக்டர் எஸ். லட்சுமிநாராயணன் கூறியது:

 "சில குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்காததால் எடை குறையும் வாய்ப்புள்ளது. அதேநிலையில், சத்தான உணவுகள் அளித்தும் எடை உயராத நிலையும் உள்ளது. இதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. உடல் எடையில் தான் அனைத்து உடல் உறுப்புகளின் ஒட்டு மொத்த வளர்ச்சியும், மூளை வளர்ச்சியும் அடங்கியுள்ளன. இந்தக் குழந்தைகள் அனைவருக்கும் சென்னை உள்ளிட்ட பிற மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை செய்யப்பட வேண்டியதன் அவசியம் இந்தப் பரிசோதனையில் தெரியவந்தது என்றார்.

 ஆட்சியர் எம். சந்திரசேகரன் கூறியது:

 இந்த முகாமில் 8 ஆண் குழந்தைகளும், 12 பெண் குழந்தைகளும் பங்கேற்றனர். இதில் சவலைக் குழந்தைகள் என வகைப்படுத்தியதில் இரண்டாம் நிலையில் 2, மூன்றாம் நிலையில் 17, நான்காம் நிலையில் 1 எனக் குழந்தைகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளனர்.

 இந்தக் குழந்தைகளில் இனவிருத்தி உறுப்பு குறைபாடு, இருதய நோய், இருபக்க குடலிறக்கம், பிறவி எலும்புக் குறைபாடு, மூளை வளர்ச்சிக் குறைபாடு மற்றும் தசை இறுக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் சத்தான உணவு வழங்கப்பட்டும் எடைக் குறைவு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

 இவர்களுக்கு சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அல்லது தேவையேற்படின் பிற தனியார் மருத்துவமனைகளிலும் உயர் சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இந்தக் குழந்தைகளின் பெற்றோர் அனைவருமே ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான். எனவே, தமிழக முதல்வர் அண்மையில் அறிமுகப்படுத்திய உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்காக கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இந்தப் பெற்றோர்களை இணைத்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் மருத்துவமனைக்குச் சென்று வர போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்கும் உதவிகள் செய்யப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.