உப்பிலியபுரம் ஒன்றியத்தில் சமத்துவபுரம் அமைக்கப்படுமா?
துறையூர், ஆக. 5: திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் உள்ள பின்தங்கிய பகுதியான உப்பிலியபுரம் ஒன்றியத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அந்தப் பகுதி மக்களிடையே ஏற்பட்
துறையூர், ஆக. 5: திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் உள்ள பின்தங்கிய பகுதியான உப்பிலியபுரம் ஒன்றியத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அந்தப் பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
உப்பிலியபுரம் ஒன்றியத்தில் 18 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றியம் முழுவதுமாக கிராமப்புறங்களை மட்டுமே உள்ளடக்கியது, இங்கு வறுமைக் கோட்டிற்கு கீழே வசிப்பவர்கள் பெரும்பான்மையானோர் உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 8 சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 9-வது சமத்துவபுரம் உப்பிலியபுரம் ஒன்றியத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
2008-ம் ஆண்டுக்கு முன்பு வரை 145 சமத்துவபுரங்கள் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் 23.1.2008 அன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய தமிழக ஆளுநர், பெரியார் பெயரில் மேலும் 95 சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதையொட்டி, சென்னை, நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக மற்ற ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சமத்துவபுரம் வீதம் 2008-09 ஆம் ஆண்டில் 29 சமத்துவபுரங்களும், 2009-10 ஆம் ஆண்டில் சென்னை, நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக, திருப்பூர் மாவட்டம் உள்பட ஒரு மாவட்டத்திற்கு ஒரு சமத்துவபுரம் என்ற அடிப்படையில் 30 சமத்துவபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அண்மையில் திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை ஒன்றியம், ஆராய்ச்சி கிராமத்தில் அமைக்கப்பட்ட திருச்சி மாவட்டத்தின் 8-வது சமத்துவபுரத்தை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.
2008-ம் ஆண்டு ஆளுநர் அறிவிப்பின்படி 95 சமத்துவபுரங்களில் இதுவரை 59 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள 36 சமத்துவபுரங்கள் 2010-11 ஆம் ஆண்டில் அமைக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்றை திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியத்தில் ஏற்படுத்த வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் விரும்புகின்றனர்.