திருச்சி

பயனற்ற நிலையிலுள்ள சாலைகள் சீரமைக்கப்படுமா?

அரியலூர், டிச. 19: திருமானூர் - அரியலூர் சாலையில் வாகனங்களில் செல்வோர் முதுகு வலி, இடுப்பு வலி, உடம்பு வலி உள்ளிட்ட வலிகளை எந்தவித கட்டணமும் இன்றி பெற்றுவிடலாம். ஏனெனில், அந்த அளவுக்கு சாலைகள் மோசமாக

கு. வைத்திலிங்கம்

அரியலூர், டிச. 19: திருமானூர் - அரியலூர் சாலையில் வாகனங்களில் செல்வோர் முதுகு வலி, இடுப்பு வலி, உடம்பு வலி உள்ளிட்ட வலிகளை எந்தவித கட்டணமும் இன்றி பெற்றுவிடலாம். ஏனெனில், அந்த அளவுக்கு சாலைகள் மோசமாக உள்ளன.

அதிலும் குறிப்பாக, திருமானூர் - கீழப்பழூர், கீழப்பழூர் - அரியலூர் வரை குறிப்பிட்ட சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் சாலைகள் மோசமாகவும், வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியாத நிலையிலும் உள்ளன.

ஏற்கெனவே, கல்லகம் கேட் பகுதி அருகேயுள்ள வேப்பங்குழி, கீழையூர், மேலப்பழூர் ஆகிய கிராமங்களில் உள்ள சாலைகள் மேடு, பள்ளமாகக் காணப்படுகின்றன.

இதேபோல, கீழப்பழூரிலிருந்து அரியலூர் வரையிலான 8 கி.மீ. தொலைவுள்ள சாலையில் கீழப்பழூர் தொடங்கி வாரணவாசி சமத்துவபுரம், வாரணவாசி, தவுத்தாய்க்குளம் வரை ஆங்காங்கே சாலைகள் அரித்தும், மேடு பள்ளமாகவும் காணப்படுகின்றன. இந்தச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் எழுப்பும் தூசி, புகையால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இதுபோன்ற சாலைகளால் பேருந்துகளில் பயணம் செய்வோரும், பேருந்து ஓட்டுநர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

அரியலூர் நகருக்குள் வரும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதால், பல பேருந்து ஓட்டுநர்கள் புறவழிச் சாலை வழியாக ஜயங்கொண்டம் சாலை, மாவட்ட ஆட்சியரகம் வழியாக பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.

திருமானூரிலிருந்து கீழப்பழூர் வரையிலான சாலை மோசமாக உள்ளதால், வழக்கமாகச் செல்லும் நேரத்தைவிடத் தாமதமாகவே பேருந்துகள் வந்து செல்கின்றன.

புறநகர்ப் பகுதியில்தான் சாலைகளின் நிலைமை இப்படி என்றால், அரியலூர் நகருக்குள் உள்ள சாலைகளும் மோசமாகத்தான் உள்ளன. அதிலும் குறிப்பாக, ராஜாஜிநகர், செந்துறை சாலை போன்ற பகுதிகள் மிகவும் மோசமாக உள்ளன.

பெரம்பலூர் வழியாக அரியலூருக்குள் கனரக வாகனங்கள் வராமல், புறநகர்ச் சாலை வழியாகச் செல்லும் வகையில், புறவழிச் சாலைத் திட்டம் தொடங்கி, 90 சதப் பணிகள் முடிக்கப்பட்டாலும், ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்படாததால், அனைத்து கனரக வாகனங்களும் அரியலூருக்குள் வந்துதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்த வகையில், நாள்தோறும் கனரக வாகனங்கள் ஏராளமாக வந்து செல்கின்றன. சில நேரங்களில் அரியலூருக்குள் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது.

நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் கனரக வாகனங்களில் பொருள்கள் ஏற்றி வரப்படுவதால், சாலையின் தாங்குத்திறன் குறைந்து சாலைகள் சேதமடையத் தொடங்குவதாகவும், அந்தச் சாலையைக் குறிப்பிட்ட காலத்துக்குள் சீரமைக்கத் தவறுவதால், அது மேலும் மோசமடைந்து வாகனப் போக்குவரத்துக்கே பயனற்ற நிலையில் உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு முறையும் மழைக் காலத்தில் சாலைகள் சேதமடைவதும், அதைத் தாற்காலிமாகச் சீரமைப்பதும்தான் வழக்கமாக உள்ளது. ஆனால், இதற்கு நிரந்தரத் தீர்வு காண அரசும், ஒப்பந்ததாரர்களும் முயற்சிக்க வேண்டும்.

புதிதாகச் சாலை அமைக்கும் போதும், ஏற்கெனவே உள்ள சாலையைச் சீரமைக்கும் போதும் தரமானதாகவும், உறுதியாகவும் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT