முகப்பு
திருச்சி

மன்னார்குடி கிளை நூலகத்திற்கு சொந்தக் கட்டடம் கட்ட இடம் ஒதுக்கப்படுமா?

மன்னார்குடி,நவ. 9: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் கிளை நூலகத்திற்கு சொந்தக் கட்டடம் கட்ட தமிழக அரசு இடம் வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் எ

Updated On : 20 செப்டம்பர், 2012 at 8:39 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 11:39 PM

மன்னார்குடி,நவ. 9: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் கிளை நூலகத்திற்கு சொந்தக் கட்டடம் கட்ட தமிழக அரசு இடம் வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    கடந்த 1950 ஆண்டு முதல் கீழராஜ வீதியில் பழைமையான கட்டத்தின் மாடியில் சுமார் 1200 சதுர அடி பரப்பளவில், தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையின் சார்பில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது.

   இங்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் சுமார் 40 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. 19 புரவலர்களுடன் தற்போது 8100 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தினசரி 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், ஆய்வுக் கட்டுரை குறிப்பு எடுக்க 50-க்கும் மேற்பட்ட மாணவர்களும் இந்த நூலகத்திற்கு வருகின்றனர். மேலும், கணினி, நூல்கள் நகல் எடுக்கும் வசதியும் இங்கு உள்ளது.

Advertisement

    இந்நிலையில், நூலகம் சொந்த கட்டடத்தில் இயங்கத் தேவையான இடம் ஒதுக்கீடு செய்து தரவேண்டும் என நூலகத் துறை மூலம் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

   இதையடுத்து, மேலப்பாலத்தில் பால் பதப்படுத்தும் நிலையம் செயல்பட்டு வந்த இடத்தில், நூலகத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால்,  இந்த இடம் நகரின் மேற்கு எல்லைப் பகுதியில் இருப்பதால், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவாக இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து,  கல்கி பூங்கா, எம்ஜிஆர்நகர், காமராஜர் காய்கனி அங்காடி, அப்துல் கலாம் நகர் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சொந்தமான அரசுத் துறை நிர்வாகங்கள் இடம் தர மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

    நூலகத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்யக் கோரி தமிழக பால் வளத் துறை அமைச்சர் மதிவாணனை அண்மையில் நூலக உறுப்பினர்கள் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

    இந்நிலையில், நூலகத்தை காலி செய்யுமாறு கட்டடத்தின் உரிமையாளர் நீண்டக் காலமாக கோரி வந்தார். எனினும், நூலகத்தினர் கேட்டுக் கொண்டதை அடுத்து, பல முறை கால நீட்டிப்பு வழங்கி வந்த இடத்தின் உரிமையாளர், இரு தினங்களுக்கு முன்பு வழக்குரைஞர் மூலம் அறிவிப்பு தகவல் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    மேலும், தற்போது உள்ள நூலகம் மாடிப் பகுதியில் உள்ளதால், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் படி ஏறி நூலகத்திற்குச் செல்ல முடியாமலும், மாலை நேரங்களில் நூலகத்திற்குச் செல்லும் படிக்கட்டுப் பகுதியில் மின் விளக்கு வசதியில்லாததாலும் அனைத்து தரப்பினரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

   எனவே, தமிழக அரசு நூலகம் அமைக்கத் தேவையான இடத்தை வழங்கி, மன்னார்குடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய பொது நூலகக் கட்டடம் கட்ட அனுமதிக்க வேண்டும் எனபதே பொதுமக்களின்

எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.