ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
ஏப்.19-ல் தென் கொரியா அதிபர் லீ ஜே மியங் இந்தியா வருவது குறித்து...
தென் கொரியா நாட்டின் அதிபர் லீ ஜே மியங் அரசு முறைப் பயணமாக வரும் ஏப். 19 அன்று இந்தியாவுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய அதிபர் லீயின் 3 நாள் இந்திய பயணத்தில் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த நிலையில், தென் கொரிய அதிபர் லீ வரும் ஏப். 20 அன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து உரையாடுகிறார். இந்தச் சந்திப்பில், பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, இந்தப் பயணத்தின் மூலம் இந்தியா மற்றும் தென் கொரியா நாடுகள் இணைந்து கப்பல் கட்டுமானம், கடல்சார் தொழிற்சாலைகள், நிதி, செய்யறிவு (ஏஐ) மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பொருளாதார ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், தில்லியில் நடைபெறவுள்ள இருநாடுகளைச் சேர்ந்த முக்கிய கார்ப்பரேட் செயல் தலைவர்கள் பங்கேற்கும் தொழில் கூட்டத்தில் அதிபர் லீ கலந்துகொள்வதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்திய பயணத்தை நிறைவு செய்து அதிபர் லீ, மற்றொரு தென்கிழக்கு ஆசிய நாடான வியத்நாமுக்குச் செல்கிறார்.
ஏற்கெனவே, இந்தியாவின் பல்வேறு துறைகளில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் ரூ. 8.6 ஆயிரம் கோடி (929 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) மதிப்பில் தென் கொரியா அரசு முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.