திருத்துறைப்பூண்டியில் அரசு பெண்கள் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்படுமா?
திருத்துறைப்பூண்டி, நவ. 24: திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நகரின் மையப் பகுதியில் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, பெற்றோர்களும், மாணவிகளும் எதிர்பார்க்கின்றனர். திருத்துறைப்ப
திருத்துறைப்பூண்டி, நவ. 24: திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நகரின் மையப் பகுதியில் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, பெற்றோர்களும், மாணவிகளும் எதிர்பார்க்கின்றனர்.
திருத்துறைப்பூண்டி நகரில் 1986-ம் ஆண்டு சுமார் 300 மாணவிகளுடன் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி வேதாரண்யம் சாலையில் பழைய கால்நடை மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்டது.
2002-ம் ஆண்டில் இது மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டபோது, தாற்காலிகமாக கீற்றுக் கொட்டகைகள் அமைக்கப்பட்டு பள்ளி செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், குடந்தை தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, கீற்றுக் கொட்டகைகளில் பள்ளிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், செயல்படாமல் இருந்த அரசு ஆண்கள் மருத்துவமனை வளாகத்திற்கு இப் பள்ளியை மாவட்ட நிர்வாகம் இடம் மாற்றியது.
இந்த இடத்தில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டித் தர வேண்டும் என, சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில் பெற்றோர் - ஆசிரியர் கழகம், அனைத்து சேவைச் சங்கங்கள் கலந்து கொண்ட கூட்டத்திலும், நகர்மன்றத்திலும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதே இடத்தில் பெண்கள் பள்ளிக்கு 17 வகுப்பறைகள், ஆய்வகம், சுகாதார வளாகம் ஆகியவை அமைக்க நபார்டு திட்டத்தின் கீழ், ரூ. 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகளும் கோரப்பட்டு, பணிகள் துவங்க இருந்தன. இந்த நிலையில், அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் திருத்துறைப்பூண்டி நகரில் இருந்து சுமார் 3.5 கி.மீ. தொலைவில் வயல் வெளியில் 6 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கி, அங்கு பள்ளிக் கட்டடம் கட்ட வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், அந்த இடம் சாகுபடி நிலமாக இருந்ததாலும், மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் அபாயம் உள்ளதாலும், மாணவிகள் சென்று வருவது சிரமம் என்று கருதியும், நகரில் அரசு மருத்துவமனைக்கு அருகில் இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தை கையகப்படுத்த முயன்றது நகராட்சி நிர்வாகம். ஆனால், நன்கொடையாளர் தானமாக அளித்த இடத்திற்கும், கையகப்படுத்த முயன்ற இடத்திற்கும் நிலமதிப்பில் வித்தியாசம் இருந்ததால், அறநிலையத் துறை பள்ளிக் கல்வித் துறைக்கு நிலத்தை அளிக்கவில்லை.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசசேகரன் கடந்த பிப்ரவரி மாதம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை ஆய்வு செய்த போது, பள்ளி செயல்பட போதுமான கட்டட வசதி இல்லாத நிலையில், மர நிழலில் வகுப்பறைகள் செயல்படுவதை பார்த்தார். இதையடுத்து, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படாமல் இருந்த 17 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி செயல்பட உத்தரவிட்டார்.
தற்போது இந்தப் பள்ளியில் 800 மாணவிகள் பயின்று வருகின்றனர். நன்கொடையாளர் தானமாக வழங்கிய நிலத்தில் பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டால், மாணவிகள் இரண்டு பேருந்துகள் மாறி பள்ளிக்கு சென்று வர வேண்டிய நிலை ஏற்படும். எனவே, கடந்த 6 ஆண்டு காலமாக இயங்கி வந்த நகரின் மையப் பகுதியிலேயே அரசு ஆண்கள் மருத்துவமனை வளாகத்தை, அரசு மருத்துவத் துறையிடம் இருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு மாற்றம் செய்து, நபார்டு திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 90 லட்சம் நிதியைக் கொண்டு புதிய பள்ளிக் கட்டடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என மாணவிகளும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.