முகப்பு
திருச்சி

பவர்கிரிட் நிறுவனம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.6.46 கோடியில் அதிநவீன உபகரணங்கள்!

பவா்கிரிட் நிறுவனம் சார்பில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு ரூ. 6.46 கோடி மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Updated On : 19 நவம்பர், 2025 at 1:42 PM
பவர்கிரிட் நிறுவனம் சார்பில் மருத்துவ உபகரணங்களை திருச்சி அரசு மருத்துவமனை முதன்மையர் குமரவேலிடம் வழங்கிய நிறுவனத்தின் பொதுமேலாளர் (மனிதவளம்) தன்வீர் உள்ளிட்டோர்.
பகிர்:

பவா்கிரிட் நிறுவனம் சார்பில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு ரூ. 6.46 கோடி மதிப்பிலான அதிநவீன மருத்துவ உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

மத்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனமானது பெருநிறுவன சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ், ரூ. 6.46 கோடி மதிப்பிலான அதிநவீன மருத்துவ உபகரணங்களை திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது.

இந்த மருத்துவ உபகரணங்களை பவா்கிரீட் நிறுவனத்தின் பொதுமேலாளர் (மனிதவளம்) தன்வீர், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் முதன்மையர் எஸ். குமரவேலிடம் ஒப்படைத்தார்.

Advertisement

நிகழ்வில் பவா்கிரிட் நிறுவனத்தின் முதுநிலை கோட்ட பொது மேலாளர் தயாளன், மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த பெருநிறுவன சமூக பொறுப்புத் திட்டத்தின்கீழ், திருச்சி மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிகளும் பயனளிக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட அதிநவீன மருத்துவ உபகரணங்கள் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் நிலையான வளர்ச்சிக்கு இலக்கு என்பதன் அடிப்படையில், பவர்கிரிடின் பெருநிறுவன சமூக பொறுப்புத் திட்டம் செயல்படுகிறது.

இதுமட்டுமின்றி, நாடுமுழுவதும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு பவர்கிரிட் நிறுவனம் தொடர்ந்து பங்களித்து வருகிறது.

அக்.30 ஆம் தேதியின் நிலவரப்படி, பவர்கிரிட் நிறுவனமானது சுமார் 287 துணை மின் நிலையங்களை இயக்கி வருகிறது. மேலும், 1,81,054 சர்க்யூட் கிலோமீட்டர் மின் இணைப்புகளையும் 5,82,516 மெகாவோல்ட் ஆம்பியர் திறனையும் கொண்டுள்ளது.