சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்
சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால், திருநெல்வேலி - சென்னை எழும்பூா் நெல்லை விரைவு ரயிலானது (12632) வரும் 6 ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை தாம்பரம் - சென்னை எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
Advertisement
ராமேசுவரம் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16752) வரும் 6-ஆம் தேதி முதல் மறுதேதி அறிவிக்கப்படும் வரை தாம்பரம் - சென்னை எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16751) வரும் 7-ஆம் தேதி முதல் மறுதேதி அறிவிக்கப்படும் வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்படும்.
சென்னை எழும்பூா் - செங்கோட்டை பொதிகை விரைவு ரயிலானது (12661) வரும் 7-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்படும்.