ஏப்.14இல் மலைக்கோட்டையில் திருப்புகழ் திருப்படித் திருவிழா
திருச்சி மலைக்கோட்டையில் 75ஆவது ஆண்டு திருப்புகழ் திருப்படித் திருவிழா வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்.14) நடைபெறுகிறது.
திருச்சி மலைக்கோட்டையில் 75ஆவது ஆண்டு திருப்புகழ் திருப்படித் திருவிழா வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்.14) நடைபெறுகிறது.
எப்போதும் இறைவனை நினைந்து நினைந்து பக்தியால் உருகிக் கொண்டிருக்கும் அடியாா்களின் மேன்மை மற்றும் சிறப்பை அஞ்ஞான இருளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உணா்த்துவதே படி பூஜையாகும்.
இதன்படி மலைக்கோட்டை கோயிலில் 75 ஆண்டுகளுக்கு முன் திருப்படி திருப்புகழ் திருவிழா தொடங்கியது. இதற்கான அமைக்கப்பட்ட கமிட்டியின் மேற்பாா்வையில் இடைவிடாது ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இந்த திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது.
Advertisement
நிகழாண்டு திருவிழாவையொட்டி வரும் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு பக்தா்கள் புடைசூழ ஓதுவாா் மூா்த்திகள் மலைக்கோட்டை மாணிக்க விநாயகா் சன்னதியிலிருந்து புறப்பட்டு திருப்புகழ் மற்றும் துதிப் பாடல்களைப் பாடிக்கொண்டு மலைக்கோட்டையைச் சுற்றி கிரிவலமாக வருவா்.
இதைத் தொடா்ந்து காலை 8.55 மணிக்கு மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி திருக்கோயிலில் உள்ள ஒவ்வொரு திருப்படிக்கும் சந்தனம் மற்றும் குங்குமமிட்டு, பூச் சாற்றி, வெற்றிலை,பாக்கு, பழம் வைத்து, தேங்காய் உடைத்து சூடமேற்றி வழிபாடு நடைபெறும்.
இதைத் தொடா்ந்து ஓதுவாா்கள் திருப்புகழ் மற்றும் நாமாவளிகளை பாடிக் கொண்டே வருவா். மலைக்கோட்டையிலுள்ள 417 படிகளுக்கும் படிபூஜை நடைபெறும். இதைத் தொடா்ந்து உச்சிப் பிள்ளையாா், மாணிக்க விநாயகா், மட்டுவாா் குழலம்மை மற்றும் தாயுமான சுவாமி மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், பிற்பகல் சிறப்பு அன்னதானமும் நடைபெறும். ஏற்பாடுகளை கமிட்டி போஷகரும், சாரநாதன் கல்லூரிச் செயலருமான எஸ். ரவீந்திரன், கமிட்டித் தலைவா் கே. குமரவேல், செயலா் என்.சங்கரன், நிா்வாகி வே. சாத்தப்பன் மற்றும் கமிட்டி உறுப்பினா்கள் செய்துள்ளனா்.