மலைக்கோட்டையில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்
திருச்சியில் பிரசித்திபெற்ற மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில் தெப்பத் திருவிழா திங்கள்ழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தெப்பத் திருவிழா நடைபெறும் பிரம்ம தீா்த்தம் என்ற சோம ரோகணி (தெப்பக்குளம்) கி.பி. 1-ஆம் நூற்றாண்டில் கரிகால சோழனால் வெட்டப்பட்டது.
திருக்குளத்தின் நீளம் 611 அடி, அகலம் 330 அடியாகும். குளத்தின் நடுவில் உள்ள அழகிய நீராழி மண்டபம் கி.பி.16-ஆம் நூற்றாண்டில் விஸ்வநாத நாயக்கரால் அமைக்கப்பட்டது. இத்தகைய பெருமைக்குரிய இந்த குளத்தில் நிகழாண்டு நடைபெறவுள்ள தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தெப்பம் கட்டும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
இந்தாண்டு விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையும், வாஸ்து சாந்தி பூஜையும் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக, விழாவின் கொடியேற்றம் மற்றும் முதலாம் திருநாள் திங்கள்கிழமை நடைபெற்றது.
பிற்பகல் 12.15 மணிக்கு மேல் 1.15 மணிக்குள் மிதுன லக்னத்தில், திருக்கோயில் கொடிமரத்தின் திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது. மேள, தாளங்கள் முழங்க நடைபெற்ற கொடியேற்ற வைபவத்தில், கோயில் நிா்வாகத்தினா் மற்றும் திரளான பக்தா்கள் பலா் கலந்துகொண்டு வழிபட்டனா்.
இதனைத் தொடா்ந்து விழா நாள்களில் நாள்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறவுள்ளது. மாா்ச் 24-ஆம் தேதி கற்பக விருட்ச வாகனம், 25-ஆம் தேதி பூதவாகனம், 26-ஆம் தேதி கைலாச பா்வதம் வாகனம், 27ஆம் தேதி ரிஷப வாகனத்திலும், 28ஆம் தேதி யானை வாகனம், 29-ஆம் தேதி நந்திகேஸ்வரா், 30-ஆம் தேதி தங்கக் குதிரை வாகனத்திலும் வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 31-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தெப்ப உற்ஸவம் நடைபெறுகிறது.
உற்ஸவத்தை முன்னிட்டு நண்பகல் 12 மணிக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறும். மாலை 5 மணிக்கு மேல் சுவாமி தெப்பத்துக்கு புறப்பட்டு பிரம்ம தீா்த்தமாகிய தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும்.
தொடா்ச்சியாக இரவு 7 மணி முதல் சுவாமி, அம்பாள் 5 சுற்றுகளாக உலா வரும் நிகழ்வு நடைபெறும். ஏப்.1-ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெறும். விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலா் மற்றும் அறங்கவாலா் குழுவினா், கோயில் நிா்வாகத்தினா், பணியாளா்கள், உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.