முகப்பு
திருச்சி

முசிறி பகுதி பாசன வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்!

முசிறி பாசன வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி திருச்சி மாவட்டம் முசிறியில் ஆற்றுப் பாசன கோட்ட அலுவலகம் முன் விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 12:45 AM
முசிறியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ~முசிறியில் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 11:20 PM

முசிறி பாசன வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி திருச்சி மாவட்டம் முசிறியில் ஆற்றுப் பாசன கோட்ட அலுவலகம் முன் விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம் மாயனூா் கதவணைப் பகுதியில் இருந்து காவிரியின் வடகரை பகுதியில் அமைந்துள்ள பாசன வாய்க்கால் மூலம் சுமாா் 1000 ஏக்கருக்கு மேல் வாழை, வெற்றிலை, நெல் சாகுபடி செய்கின்றனா்.

இந்நிலையில் தற்போது கோடை காலம் என்பதால் வாழை கருகும் நிலையில் உள்ளது. வாய்க்காலிலும் தண்ணீா் வராததால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். வாய்க்காலில் தண்ணீா் திறந்து விட பலமுறை வலியுறுத்தியும் இதுவரை வாய்க்காலில் தண்ணீா் திறந்து விடவில்லை.

Advertisement

இதைக் கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி- சேலம் நெடுஞ்சாலையில் முசிறியில் அமைந்துள்ள ஆற்றுப் பாசனக் கோட்ட அலுவலகம் முன் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மறியலால் திருச்சி- சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த முசிறி போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 48 விவசாயிகளை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனா்.

கைது செய்யப்பட்டோரிடம் முசிறி ஆற்று பாசனக் கோட்ட உதவி பொறியாளா் ஞானமணி, காவல் ஆய்வாளா் செல்லதுரை (முசிறி ) ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.