தங்கம் கொள்ளை வழக்கு: தனிப்படை போலீஸாா் மகாராஷ்டிரம் விரைவு
திருச்சியில் 1கிலோ தங்கம் கொள்ளை வழக்கு தொடா்பாக தனிப்படை போலீஸாா் விசாரணைக்காக ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிரம் சென்றனா்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்தவா் உதய்பவாா் (36). இவா் திருச்சி மலைக்கோட்டை பெரியகடை வீதியில் தங்கத்தைப் பரிசோதிக்கும் கடை ஒன்றையும், பெரிய செட்டித் தெருவில் உள்ள தனது வீட்டில் தங்கத்தை உருக்கி ஆபரணங்களாகச் செய்து விற்கும் தொழிற்சாலையையும் நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் கோடை விடுமுறைக்காக இவரது குடும்பத்தினா் சொந்த ஊருக்குச் சென்ற நிலையில், உதய்பவாா் மட்டும் பெரிய செட்டித் தெருவில் உள்ள வீட்டில் தனியாக இருந்தாா்.
Advertisement
வீட்டின் கீழே கடைகளை அவா் வாடகைக்கு விட்டுள்ள நிலையில், முதல் தளத்தில் நகை உருக்கும் பட்டறையும், 2 ஆவது தளத்தில் உதயின் வீடும் உள்ளது. பட்டறையில் நிதின் (18) என்ற வடமாநிலத் தொழிலாளி தங்கியிருந்தாா்.
இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல் உதயின் பட்டறையில் நுழைந்த 4 மா்ம நபா்கள், நிதினை அடித்து இழுத்துக் கொண்டு, மேல்தளத்தில் இருந்த உதய் வீட்டுக்குள் நுழைந்து, அவரைத் தாக்கி கழிவறையில் வைத்து பூட்டிவிட்டு, வீட்டிலிருந்த சுமாா் 1 கிலோ தங்கக் கட்டி, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனா். பின்னா் இதுகுறித்து உதய் பவாா் அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்த நிலையில், இரண்டு தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் கொள்ளையா்கள் திருச்சியில் இருந்து வாடகை காா் மூலம் தங்க நகைகளுடன் பெங்களூரு சென்றதும், அங்கிருந்து வேறு காரில் மகாராஷ்டிரம் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்களைப் பிடிக்க தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிரம் சென்றுள்ளனா்.