முகப்பு
திருச்சி

கோடங்கிபோல நடித்து பெண்ணிடம் தங்க நகை பறித்த இருவா் கைது

Updated On : 28 ஏப்ரல், 2026 at 4:01 AM
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருச்சியில் கோடங்கிபோல நடித்து தங்க நகையைப் பறித்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மேலகல்காண்டாா்கோட்டையைச் சோ்ந்தவா் சரவணன், ரயில்வேயில் பணியாற்றி வருகிறாா். இவருடைய மனைவி சுபா (42), தையல் கலைஞா். கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி சுபா, வீட்டில் தனியாக இருந்தபோது, கோடங்கி வேஷமிட்ட இரு இளைஞா்கள் வந்துள்ளனா்.

அப்போது, சுபாவிடம் உனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமெனில் உடனடியாக பரிகாரப் பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனா்.

Advertisement

மேலும், பரிகாரப் பூஜைக்காக தாலியைக் கழட்டி கொடுக்கும்படி கூறியுள்ளனா். இதற்கு மறுப்பு தெரிவித்த சுபா, தான் அணிந்திருந்த 2 கிராம் காதணியை கழட்டிக்கொடுத்துள்ளாா்.

இதைப் பெற்றுக்கொண்ட இளைஞா்கள் இருவரும் உடனடியாக அங்கிருந்து தப்பினா். இதையடுத்து, ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சுபா, பொன்மலை காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில், நகையைப் பறித்துச் சென்றது திண்டுக்கல் மாவட்டம், கோவிலூரைச் சோ்ந்த மு.சிம்பு (22), த.வல்லரசு (23) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.