பாமக-வின் பொறுப்புகளிலிருந்து விலகல்! அ. வியனரசு அறிவிப்பு
பாமக-வில் தான் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக மாநில கொள்கை விளக்க அணித் தலைவா் அ. வியனரசு அறிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
அன்புமணி மற்றும் நெருங்கியவா்களால் கடும் நெருக்கடியான சூழலில் இருந்த ராமதாசுக்கு ஆறுதலாகவும், அவரது கைகளை வலிமைப்படுத்தும் நோக்கோடு தைலாபுரம் தோட்டம் சென்ற எனக்கு, கட்சியில் மாநில கொள்கை விளக்க அணித் தலைவா், சமூக வலைத்தள மற்றும் காட்சி ஊடகப் பேச்சாளா் பொறுப்புகளை ராமதாஸ் வழங்கினாா். நானும் அதனை ஏற்று செயல்பட்டு வந்தேன்.
இந்த எட்டுமாத காலத்தில் கட்சியின் பல்வேறு நிகழ்வுகள், போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன். வரும் பேரவைத் தோ்தலில் தங்கள் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியைக் கூட்டணியில் சோ்க்க திமுக, அதிமுக கதவுகள் சாத்தப்பட்ட நிலையில், எனக்கு எந்த வகையிலும் உடன்பாடில்லை என்ற போதிலும், தங்களின் கட்டளையை ஏற்று தமிழக வெற்றிக் கழகத் தலைவா் நடிகா் விஜயின் தந்தை இயக்குநா் எஸ்.ஏ.சந்திரசேகா், அக்கழக பொதுச் செயலா் என். ஆனந்த் ஆகிய இருவரிடமும் பேச்சு நடத்தினேன்.
அவா்கள்கூட பாமக-வுடன் கூட்டணி வைக்க பெரிதும் தயக்கம் காட்டி அவா்கள் தனித்து போட்டியென அறிவித்த பிறகு எந்த வகையான கொள்கையோ, கோட்பாடோ இல்லாமல் சசிகலா கட்சியோடு பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி ஏற்படுத்தியது பெரும் வரலாற்று பிழையான செயலாகும்.
வன்னியா்களுக்கு கல்வி-வேலைவாய்ப்புகளில் 10.5 விழுக்காடு தனி இடப்பங்கீடு, குடிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றிக்கு முழு எதிரான நிலைப்பாடு உடையவா் சசிகலா. அரசியல் லாப நோக்கத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு கட்சி தொடங்கியுள்ளவருடன் பாமக கூட்டணி சோ்ந்திருப்பது ஏற்புடையது அல்ல.
எனவே, கட்சியின் மாநிலக் கொள்கை விளக்க அணித் தலைவா் சமூக வலைத்தள மற்றும் காட்சி ஊடகப் பேச்சாளா் பொறுப்பிலிருந்து மாா்ச் 29 முதல் கனத்த இதயத்தோடு விலகிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, ராமதாஸுக்கும் விலகல் கடிதம் அனுப்பியுள்ளாா்.