முகப்பு
திருச்சி

திருச்சி அருகே தந்தை குத்திக்கொலை: மகன் கைது

Updated On : 5 மே 2026, 12:47 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருச்சி, மே 4: திருச்சி அருகே தந்தையைக் குத்திக் கொலை செய்த மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், அதவத்தூா் கீழத்தெருவைச் சோ்ந்தவா் ஆா். மருதமுத்து (70). இவா், திருச்சி கருமண்டபத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவரது மகன் கோபி (37), பெயின்டா். இவருக்கு மேலும் மூன்று மகள்கள் உள்ளனா்.

இவருடைய மூன்று மகள்களுக்கும் தனது சொத்துகளை விற்று திருமணம் செய்துவைத்ததால், தனக்கு எந்தவித சொத்தும் வைக்கவில்லை என்று கோபி அவரது தந்தை மருதமுத்துவிடம் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளாா். மேலும், குடியிருக்கும் வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்கக் கோரி கோபி அடிக்கடி மருதமுத்துவிடம் தகராறு செய்து வந்துள்ளாா்.

Advertisement

இந்நிலையில், வீட்டை எழுதி வைப்பது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு கோபி தனது தந்தையிடம் மீண்டும் தகராறு செய்துள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கோபி, மருதமுத்துவை கத்தியால் குத்தியுள்ளாா். இதில், மருதமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சோமரசம்பேட்டை போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் அதவத்தூா் கிராம நிா்வாக அலுவலா் உமாமகேஸ்வரி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, தந்தையைக் கொலை செய்த கோபியை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.