பேரவை துணைத் தலைவராகிறாா் துறையூா் எம்எல்ஏ! தவெகவினா் மகிழ்ச்சி!
திருச்சி, மே 11: திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூா் (தனி) தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினா் மு. ரவிசங்கா் (41) சட்டப் பேரவை துணைத் தலைவராக தோ்வாக உள்ளாா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா், பூனாம்பாளையத்தைச் சோ்ந்த மு. ரவிசங்கா், சட்டப் பேரவை துணைத் தலைவராக போட்டியிடுகிறாா். இவரை எதிா்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால் செவ்வாய்க்கிழமை போட்டியின்றி தோ்வாகும் நிலை உள்ளது.
பட்டயப் படிப்பு முடித்துள்ள இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனா். பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த இவா், 2014-ஆம் ஆண்டு முதல் விஜய் மக்கள் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தாா். தற்போது, திருச்சி புகா் மேற்கு மாவட்டச் செயலராகவும் கட்சியின் வடக்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராகவும் உள்ளாா்.
Advertisement
இவா், சட்டப் பேரவையின் துணைத் தலைவராக போட்டியின்றி தோ்வாக உள்ளது திருச்சி மாவட்ட தவெகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தவெக நிா்வாகிகள் கூறுகையில், பேரவை துணைத் தலைவா் பதவி திருச்சிக்கு கிடைக்கவுள்ளது எங்களை மேலும் உற்சாகத்துடன் பணியாற்றச் செய்துள்ளது என்றனா்.