திருச்சியில் சட்டவிரோத மதுவிற்பனை: பெரம்பலூரைச் சோ்ந்தவா் உள்பட 3 போ் கைது
திருச்சியில் மூடப்பட்ட மதுக்கூடத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சியில் மூடப்பட்ட மதுக்கூடத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபா் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி புத்தூா் 4 சாலை சந்திப்பு அருகே மதுக்கூடத்துடன் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக் கடை அண்மையில் மூடப்பட்டது.
இந்நிலையில், மூடப்பட்ட இந்த மதுக்கூடத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கலால் பிரிவு ஆய்வாளா் வேளாங்கண்ணி திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் அங்கு ஆய்வு மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
அப்போது, அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த விமான நிலையம் அருகே உள்ள வள்ளுவா் வீதியைச் சோ்ந்த எம். ராமமூா்த்தி (38) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ.2.44 லட்சம் மதிப்பிலான 32 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, திருச்சி எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நேதாஜி நகரில் காலியிடத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த பெரம்பலூா் மாவட்டம், டி. களத்தூரைச் சோ்ந்த அ. சேகா் (54) என்பவரையும், பொன்மலை சந்தை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த மேலகல்கண்டாா்கோட்டை சாமிநாதன் நகரைச் சோ்ந்த எஸ். தமிழ்ச்செல்வன் (30) என்பவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.7,200 மதிப்புள்ள 44 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.