அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்த திருமழபாடி கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 25 பேர் காயமடைந்தனர்.
திருமானூர் அருகேயுள்ள திருமழபாடி கிராமத்தில் வியாழக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசாமி கோயிய்லிருந்து சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. பின்னர் மேலராஜ வீதியில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசல் வழியாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
தொடர்ந்து திருச்சி, லால்குடி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அலங்கரித்துக் கொண்டு வரப்பட்ட 400 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்க 160 மாடுபிடி வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 25 பேர் காயமடைந்தனர். இவர்களில் பலத்த காயமடைந்த வைத்தியநாதன் பேட்டையைச் சேர்ந்த ராஜா(40), மூக்கையன்(60), மகாராஜன்(31), திருவெங்கனூர் பிரபாகரன்(25) கருவிடச்சேரி தனராஜ் (32) ஆகியோர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம், சில்வர் பாத்திரங்கள், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.