அரியலூர் மாவட்டம், இலுப்பையூர், சென்னிவனம் மற்றும் ஒட்டக்கோவில் ஆகிய வருவாய் கிராமங்களில் 2,000 ஹெக்டர் நிலப்பரப்பில் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கோடை உழவுப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
அரியலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் (பொ) சி. பாஸ்கரன் தலைமை வகித்து பணியை தொடக்கி வைத்தார்.
அப்போது அவர், கோடை உழவின் நன்மைகளான மண்ணின் நீர்பிடிப்பு தன்மை அதிகமாவது, மண் அரிப்பு தடுக்கப்படுவது, நிலத்தடிநீர் உயர்வது, மண்ணில் உள்ள பூச்சிகளின் முட்டைகள் அழிக்கப்படுவது மற்றும் பூஞ்சானங்கள் அழிக்கப்படுவது குறித்தும், கோடை உழவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 500 பின்னேற்பு மானியம் வழங்கப்படுவது குறித்தும் தெரிவித்தார். வட்டார துணை வேளாண் அலுவலர் அ. இளவரன், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ந. பழனிசாமி அகியோர் பங்கேற்று கோடை உழவு குறித்து விளக்கினர். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் இளங்கோவன் மற்றும் கிராம விவசாயிகள் செய்திருந்தனர்.