கங்கைகொண்ட சோழபுரம்: பிரகதீசுவரர் கோயிலில் நாளை அன்னாபிஷேகம்
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை (நவ.3) அன்னாபிஷேகம் நடைபெறஉள்ளது. இதையொட்டி
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை (நவ.3) அன்னாபிஷேகம் நடைபெறஉள்ளது. இதையொட்டி கோயில் வளாகத்திலுள்ள கணக்க விநாயகருக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகிலுள்ள கங்கைகொண்டசோழபுரத்தில் முதலாம் ராஜேந்திரன் கங்கைவரை படையெடுத்து வெற்றி பெற்றதன் அடையாளச் சின்னமாக கட்டப்பட்ட பிரகதீசுவரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்ட பிரகதீசுவரருக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். 100 மூட்டை அரிசி கொண்டு சாதம் சமைத்து லிங்கத்தின் மீது சாற்றப்படுவது வழக்கம். அன்னாபிஷேகத்தில் சுவாமி தரிசனம் செய்வது ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான லிங்கத்தை தரிசனம் செய்த புண்ணியம் கிட்டும் என்பதும் ஐதீகம்.
காஞ்சி சங்கர மடம் சார்பில் நடத்தப்படும் நிகழாண்டுக்கான அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறஉள்ளது. இதையொட்டி கோயில் வளாகத்திலுள்ள கணக்க விநாயகருக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பால், சந்தனம், மஞ்சள், திரவியத் தூள் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்துக்குப் பின்னர் தீபாராதனை நடைபெற்றது.
பிரகதீசுவரருக்கு வியாழக்கிழமை மகாஅபிஷேகம் நடைபெறும். வெள்ளிக்கிழமை (நவ.3) காலை 8 மணி முதல் சாதம் அமைத்து லிங்கத்தின் மீது சாற்றப்பட்டு, மலர்கள், பழங்கள், பலகாரங்களைக் கொண்டு அலங்கரிக்கப்படும். மாலை 6 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.
அன்னாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.