அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள முத்துசேர்வாமடம் வெள்ளாழர் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அண்ணாதுரை(52) விவசாயி. இவரது பாகப்பிரிவினை தொடர்பான வழக்கு அரியலூர் உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான போது, நீதிமன்றக் குழுவினர் வெள்ளிக்கிழமை நிலத்தை பார்வையிட வருவதாகக் கூறினர். இதையடுத்து வீட்டுக்கு வந்தவர் வயலுக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்றவர்
பின்னர் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில் வியாழக்கிழமை காலை அவரது வயலுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு மரத்தில் அவர் தூக்கில் தொங்கியபடி சடலமாகக் கிடந்தாராம். தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்கு பதிந்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.