காவல் துறையினர் தங்களது பணிச் சுமையை குடும்பத்துக்குள் கொண்டு வரக் கூடாது என்றார் மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜன்.
அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற வந்த காவல் துறையினருக்கான மன அழுத்தப் பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்று வரதராஜன் மேலும் பேசியது:
காவல்துறையினர் தங்களது பணிச் சுமையை குடும்பத்துக்கும், குடும்பச் சுமையை பணியின்போதும் கொண்டு வரக் கூடாது.அப்படி கொண்டு வருவதால்தான் காவல் துறையினருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்த மன அழுத்தத்தைப் போக்க தமிழக அரசு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கி காவல் துறையினருக்கு மன அழுத்தத்தை போக்கும் பயிற்சியை நடத்தி வருகிறது. இந்தப் பயிற்சியை இந்தியாவில் வேறு எங்கும் அளிப்பதில்லை.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவலர்களுக்கும் இந்தப் பயிற்சி 23 வாரங்கள் நடைபெறவுள்ளது. வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பணிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
எனவே நாட்டின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு என மக்களை நேரடியாகச் சந்திக்கும் காவலர்களின் இன்னல்களைப் பொதுமக்களும் உணர்ந்து இணக்கத்துடன் செயல்பட வேண்டும்.
அப்போதுதான் காவல்துறை நம் நண்பன் என்பது எளிதில் புலப்படும் என்றார் அவர். பின்னர் பயிற்சி பெற்ற காவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர். ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார்.