உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு ஜயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக். பள்ளியில் உலக ஓசோன் தின கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் பள்ளி தாளாளர் த. முத்துகுமரன் தலைமை வகித்து பேசியது: வாகன புகையினாலும், குளிர்சாதனக் கருவிகள் பயன்பாடு அதிகரிப்பு, மரங்களின் எண்ணிக்கை குறைந்துபோனது உள்ளிட்ட காரணங்களால், ஓசோன் வளிமண்டலப் படலம் வலுவிழந்து சூரியனின் நேரடிக் கதிர்வீச்சின் தாக்கத்தால் பூமி அதிக வெப்பமடைகிறது. பல்வேறு தோல் நோய்கள், தோல்புற்றுநோய்கள், சுவாசம் சம்மந்தப்பட்ட நோய்கள், மனிதர்களை நேரிடையாகத் தாக்குகின்றன. பருவநிலை மாற்றங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன. வாகனங்களின் புகையில் உள்ள கார்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு சுற்றுச்சூழலை மாசடையச் செய்வதோடு மட்டுமில்லாமல், ஓசோன் படலத்தையும் பாதிக்கிறது. குளிர்சாதனப் பெட்டியிலிருந்து சிஎப்சி வாயு வெளிவருவதால் ஓசோன் படலம் சேதமடைகிறது. இதன் விளைவாக கடந்த 20 ஆண்டுகளுக்குமுன்பு இருந்ததை விட பல மடங்கு வெப்பம்அதிகரித்து வருகிறது. ஆகையால் ஓசோன் படலம் மீண்டும் சேதமாவதைத் தடுக்கும் வகையில் புவியைப் பாதுகாக்கும் வகையிலும், ஒவ்வொருவரும் மூன்று மரக்கன்றுகளாவது நட வேண்டும். ஓசோன் படலத்திற்கு தீங்கை உண்டாக்காத வகையில் குளிர்சாதனப் பெட்டி, ஏ.சி., வாகனங்கள் தயாரிக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள முன் வரவேண்டும் என்றார். முன்னதாக பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். துணை முதல்வர் நன்றி கூறினார்.