அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் சூர்யாவுக்கு கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு இயக்கத்தினர் சார்பில் சனிக்கிழமை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அரியலூர் அடுத்த திருமானூரை அடுத்த கூலித்தொழிலாளி சுப்ரமணி மனைவி நதியா, மகன்கள் சந்துரு(7) சூர்யா(9) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை மாலை கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது, சூர்யா ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டான். தகவலறிந்த மீட்புப் படையினர் சனிக்கிழமை சிறுவன் சூர்யாவை சடலமாக மீட்டனர். இதையடுத்து, கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு இயக்கத்தினர் சார்பில் திருமானூர் பேருந்து நிலையத்தில் முக்கியவீதிகளின் வழியாக அமைதி ஊர்வமாகச் சென்று சிறுவனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, இடுகாட்டுக்கு சென்று கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க விடமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஊர்வலத்தில் கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு இயக்க பொருப்பாளர்கள் தனபால், கைலாசம், முத்துக்குமரன், வடிவேல்முருகன், மாரியம்மாள், நடராஜன், வினோத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.