தேர்தலின்போது அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் காயமடைந்தோரை காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவு மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் ஜயங்கொண்டத்தில் அவர் அளித்த பேட்டி:
பொன்பரப்பி வன்முறையில் கொடூரமாக மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகளைச் சேதப்படுத்தியுள்ளனர். இது புதிதல்ல. ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர்ந்து தமிழகத்தில் ஏதாவது ஒரு பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் இடங்களில் வன்முறை நடந்த வண்ணம் உள்ளது. ஆதிக்க சக்திகள் இதை நடத்தி வருகின்றனர். காவல்துறையும் இதை வேடிக்கை பார்க்கிறது.
இந்தத் தேர்தலில் சிறுபான்மையின மக்கள், தலித் மக்கள் அனைவரும் பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். முன்பெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சியினர் தான் இதில் ஈடுபடுவர். இந்த முறை இந்து முன்னணியும் இதில் சேர்ந்திருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர் என்றார் அவர்.