மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
அரியலூர் மாவட்டம், செந்துறையில் மாற்றுத்திறனாளிகள் சங்கம்,செந்துறை கிரீன் சிட்டி லயன்ஸ் சங்கம்
அரியலூர் மாவட்டம், செந்துறையில் மாற்றுத்திறனாளிகள் சங்கம்,செந்துறை கிரீன் சிட்டி லயன்ஸ் சங்கம், சிவஞானம் அம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவஞானம் அம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் குமார் தலைமை வகித்து, 3 பேருக்கு ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கினார்.
திமுக ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் எழில்மாறன், தனியார் திருமண மண்டப உரிமையாளர் அன்பு,கல்யாணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் வாழ்வியல் உதவித் தொகையை வழங்கினர். மேலும் சோழன்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவர் அஜய்ஸ்ரீ-க்கு மேல்நிலைக்கல்வி பயிலும் வரை ஆகும் செலவுத் தொகையை செந்துறை ஐஎஸ்ஆர் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் பிரபு ஏற்றுக்கொண்டார்.
விழாவில் தமிழ்க்களம் இளவரசன், சமூக ஆர்வலர் அருள்மொழிவர்மன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணி நிர்வாகிகள் பாலசிங்கம், கமல், ராம்குமார், சித்த மருத்துவ மாணவி பத்மப்ரியா, குணசேகரன் உள்ளிட்டோர் பேசினர்.
அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க செயலர் ராயர் வரவேற்றார். செந்துறை ஒன்றியச் செயலர் வேல்மணி நன்றி தெரிவித்தார்.