அரியலூரில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் நகராட்சியின் 5 ஆவது வார்டுக்குள்பட்ட மணியன்குட்டை தெருவில் கடந்த சில நாள்களாக சரிவர குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை குடிநீர் வழங்கப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை ரயில் நிலையம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வந்த போலீஸார்,இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.