அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் சர்வதேச தூய்மையான கைகள் நாள் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு கல்லூரி இயக்குநர் இரா.ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். இணைச் செயலர் எம்.ஆர்.கமல்பாபு முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் முத்தமிழ்ச்செல்வன், ராஜசேகர், சபரிநாத், சுரேஷ், சுமதி கருத்தரங்கில் பங்கேற்று பேசினர்.
கை கழுவுவது என்பது கைகளை தண்ணீரில் நனைப்பது இல்லை. அவ்வாறு செய்வதால் கைகளில் உள்ள நோய் கிருமிகள் அழியாது. சோப்பைக் கொண்டு முறையாக கழுவுவதன் மூலமே கிருமிகளைக் கொல்ல முடியும்.
இவ்வாறு கை கழுவுவதன் மூலம் குழந்தைகள் 50 சதவிகித வயிற்றுப்போக்கு மற்றும் 25 சதவிகிதம் நிமோனியாவிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். இதைத் தவிர டைப்பாய்டு, மஞ்சள் காமாலை, வயிற்றுப் பூச்சிகள், பன்றி காய்ச்சல், எபோலோ, தோல் மற்றும் கண் சம்பந்தபட்ட நோய்களும் நெருங்குவதில்லை. சிறு குழந்தையாக இருக்கும் போதே கை கழுவும் பழக்கத்தை சொல்லித்தரவேண்டும் என்று பேராசிரியர்கள் தங்கள் உரையில் குறிப்பிட்டனர்.முன்னதாக பேராசிரியர் தட்சணாமூர்த்தி வரவேற்றார். நிறைவில் பேராசிரியர் கமலஹாசன் நன்றி தெரிவித்தார்.