அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கில் திமுக ஒன்றியச் செயலரின் மகன் உள்ளிட்ட 6 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருமானூர் அருகேயுள்ள செட்டிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (32). இவர், அருகேயுள்ள கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மனைவி சாரதாவுடன் கள்ளூர் கிராமத்துக்குச் சென்றிருந்த சரண்ராஜை, மர்மநபர்கள் கட்டையால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அருங்கால் கிராமத்தைச் சேர்ந்தவரும், திமுக ஒன்றியச் செயலாளருமான ஜோதிவேல் மகன் பூவரசன் (20), ஜோதிவேல் சகோதரர் கலியமூர்த்தி மகன் மணிகண்டன்(27), துரைராஜ் மகன் சூர்யா(20), குணசேகரன் மகன் முத்து (எ) ராஜபாண்டி (23), சம்பத் மகன் அஜித் (21), சந்திரகாசன் மகன் விஜயகுமார் (37) ஆகிய 6 பேரும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக சரண்ராஜை அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அவர்கள் 6 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.