நெல் சாகுபடியில் அதிக மகசூல் கிடைக்க பசுந்தாள் உரம் பயிரிட வேண்டும் என்று திருமானூர் வட்டார வேளாண் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் தங்கள் வயலில் ராசாயன உரங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் மண்ணின் தன்மை மாறி, அங்ககச் சத்துகள் குறைந்து மண் வளமற்றதாகி விடுகிறது. மண்வளத்தை அதிகரிக்க விவசாயிகள் நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் விடும் முன்னர் பசுந்தாளுரம் பயிரிட வேண்டும்.
ஏக்கருக்கு 20 கிலோ விதைகளை விதைக்க வேண்டும். களிமண் பகுதிக்கு தக்கைப்பூண்டும், மணல்சாரி பகுதிக்கு சணப்பும் ஏற்றது. 35 முதல் 40 நாள்களில் பூக்கும் தருணத்தில் இதை மடக்கி உழுது மண்ணுக்கு அடியுரமாக மாற்றிவிட வேண்டும். இதனால் ஏக்கருக்கு 20-25 டன் தழைகள் கிடைக்கிறது.
மேலும் தக்கைப்பூண்டு தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்தும் தன்மை கொண்டது. இதனால், அடுத்த பயிருக்கான உரத்தேவை 40-60 சதவீதம் வரை குறைகிறது. மண்ணின் தன்மையும் உயர்கிறது.
எனவே விவசாயிகள் பசுந்தாள் உர விதைகளைப் பயிரிட்டு அடுத்த பயிரில் கூடுதல் மகசூல் பெறலாம் என திருமானூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் லதா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.