நீர் மேலாண்மையில் தனி மனிதனின் பங்கும் அவசியமானது என்றார் ஆட்சியர் டி.ஜி.வினய்.
அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூர் விநாயகா கல்வியில் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட நீர் நிலைகளின் மேலாண்மைக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு மேலும் பேசியது:
நீர் மேலாண்மையை அரசு மட்டுமே செய்ய வேண்டும் என நினைத்தல் கூடாது. நீர் மேலாண்மையில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பங்குண்டு. தங்களது வீட்டில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது. அதிக வயல் வைத்திருக்கும் விவசாயிகள் தங்களது வயல் பகுதியிலேயே ஒரு இடத்தில் குட்டை அமைப்பது. வரத்து வாய்க்கால்களை பாதுகாப்பது தனிமனிதனின் கடமையாகும்.
அதுபோல், ஏரி, குளம், குட்டைகள் நமது இதயம் போன்றது. நமது உடலில் இதயம் நன்றாக இருந்தாலும், அதற்கு வரக் கூடிய நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டால் எப்படி இதயம் நின்று போகிறதோ, அதுபோல் தான், ஏரி, குளங்களுக்கு வரும் வரத்து வாய்க்கால்களும்.
அரியலூர் மாவட்த்தில் ஏரி, குளங்களை வெட்டுவதற்கு முன் வரத்து வாய்க்கால்களையும் சேர்த்து அளவீடு செய்து தூர்வாரப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகளும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, தொழில்நுட்ப அலுவலர் மோகனசுந்தரம், இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலச் செயலர் ராஜேந்திரன், சமவெளி விவசாயிகள் இயக்க தலைவர் பழனிராஜன் உள்ளிட்டோர் நீர்நிலைகள் குறித்தும், அதனை மேன்மை படுத்துவதன் அவசியம் குறித்தும் பேசினர்.
கூட்டத்துக்கு சென்னை சுப்ரமணியன், சுயாட்சி இயக்க தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட நீர்நிலைகளின் மேலாண்மைக்குழு தலைவர் சி.பாஸ்கர் வரவேற்றார். முடிவில், மேலாண்மை குழு இணை ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் நன்றி தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டத்தில், நீர் நிலைபாதுகாப்பு கூட்டமைப்பு திருவாரூர் வெண்ணிலா ரவிச்சந்திரன், இணை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, தஞ்சை விமலநாதன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் விஸ்வநாதன், சமூக ஆர்வலர்கள் செந்தூர்பாரி, தங்க.சண்முகசுந்தரம்,திருஞானம், இளவரசன், சுதாகர் மற்றும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.