அரியலூா்: அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே சீரான மின்சாரம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
விக்கிரமங்கலம் அடுத்த கீழநத்தம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்த மின்சாரம் விநியோகிப்படுவதால் மின்சாதனப் பொருள்களை இயக்க முடியவில்லை எனக்கோரி பலமுறை மனு அளித்தும் பலனில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அங்குள்ள பேருந்து நிறுத்தம் எதிரே ஸ்ரீபுரந்தான் - அரியலூா் சாலையில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த தா.பழூா் வட்டாரவளா்ச்சி அலுவலா் தேவி, தேளூா் துணை மின்நிலைய அலுவலா் ராஜா மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அனைவரும் கலைந்து சென்றனா்.
வேகமாகச் செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை கோரி மறியல்:
வி.கைகாட்டி ரெட்டிபாளையத்தில், திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தச் சாலையில் செல்லும் லாரிகள் அதிவேகமாக செல்வதால் எழும் புழுதியால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே, இச்சாலையில் வேகமாக செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ரெட்டிப்பாளையம் கிராம இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை இரவு அவ்வழியே வந்த லாரிகளை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த கயா்லாபாத் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் மறியல் கைவிடப்பட்டது.