கோவையில் 854 இடங்களில் மரக்கிளைகள் வெட்டப்படுகின்றன
854 இடங்களில் மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டப்பட்டு வருவதாக மாநகர மேற்பாா்வைப் பொறியாளா் கொ.குப்புராணி தெரிவித்துள்ளாா்.
கோவை மாவட்டத்தில் மின் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 854 இடங்களில் மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டப்பட்டு வருவதாக மாநகர மேற்பாா்வைப் பொறியாளா் கொ.குப்புராணி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் மேலும் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜியின் உத்தரவின்படி, கோவை மின் பகிா்மானம், மாநகா் வட்டத்துக்குள்பட்ட நகரம், மையம், ஒண்டிப்புதூா் கோட்டங்களில் உள்ள 18 துணை மின் நிலையங்களில் 161 மின்னூட்டப் பாதைகளில் களப் பணியாளா்களைக் கொண்டு பல்வேறு பராமரிப்புப் பணிகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, 854 இடங்களில் மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டுதல், 18 இடங்களில் உள்ள தொய்வான மின்பாதை கம்பிகளை சரி செய்தல், 24 இடங்களில் சாய்வாக உள்ள மின் கம்பங்களை சரி செய்தல், 20 இடங்களில் மின் கம்பங்களை மாற்றுதல், 27 இடங்களில் பழுதடைந்த நில இணைப்புகளை சரி செய்தல், 96 இடங்களில் உள்ள பழுதடைந்த திறப்பான்களை சரி செய்தல், 21 இடங்களில் புதிய மின் கம்பங்களை அமைத்தல், 233 இடங்களில் உள்ள பலவீனமான இணைப்புகளை சரி செய்தல், 124 இடங்களில் பலவீனமாக இருக்கும் இன்சுலேட்டா், டிஸ்க் போன்றவற்றை மாற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவா் தெரிவித்துள்ளாா்.