அரியலூா் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தபடவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்தப் பகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரியலூா், ஜயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் வாக்குச்சாவடி வாரியாக பயன்படுத்தப்பட வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் முதற்கட்டப் பணி ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில், ஆட்சியா் த. ரத்னா தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்றன.
20 சதவீத இருப்புடன் அரியலூா் தொகுதிக்குள்பட்ட 376 வாக்குச்சாவடி மையங்களுக்கு 452 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 452 கட்டுப்பாட்டுக் கருவிகளும் மற்றும் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு கருவிகள் 28 சதவீத இருப்புடன் 482-ம், மேலும், ஜயங்கொண்டம் தொகுதிக்கு உட்பட்ட 377 வாக்குச்சாவடி மையங்களுக்கு 453 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 453 கட்டுப்பாட்டு கருவிகளும் மற்றும் வாக்குப்பதிவு உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு கருவிகள் 28 சதவீத இருப்புடன் 483-ம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கருவிகளும் அந்தந்த தொகுதிகளுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.