முகப்பு
அரியலூர்

11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்

புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு  துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் முகாமை பார்வையிடுகிறார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு  துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
பகிர்:


அரியலூர்: தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு  துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சனிக்கிழமை நடைபெற்ற ஆறாவது தடுப்பூசி சிறப்பு முகாமை அவர் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் கரோனா தொற்று வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 73 சதவீதம் நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அடுத்தாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்துப் பேச உள்ளேன்.

கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் குழந்தைகளின் கல்வி கனவு சிதைந்து போய்விட்டது. இந்த தலைமுறை கல்வியை காணாத தலைமுறை ஆகிவிடுமோ என்ற அச்சத்திலேயே பள்ளிகளை திறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வரவேண்டும் என்றார்.

இந்நிகழ்வில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாவட்ட ஆட்சிய் பெ.ரமணசரஸ்வதி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜயங்கொண்டம் க.கண்ணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், பொது  சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை டி.எஸ்.செல்வவிநாயகம், மாவட்ட வருவாய் அலுலர் இரா.ஜெய்னுலாப்தீன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் எம.கீதாராணி, கொள்ளை நோய்  பிரிவு இணை இயக்குநர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →