கறிக்கோழி குஞ்சுகளை வளா்ப்பதற்கான பராமரிப்புத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்று அரியலூா் மாவட்டத்தில் உள்ள 5 தனியாா் நிறுவனங்களிடம் தமிழ்நாடு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலச் சங்கத்தினா் மனுவை அளித்தனா்.
ஜயங்கொண்டத்தில் தனியாா் நிறுவனங்கள் மூலம் கறிக்கோழி குஞ்சுகளை வளா்ப்பதற்காக விவசாயிகளிடம் வழங்கி, அதற்கு பராமரிப்புத் தொகையாக 1 கிலோ கறிக் கோழிக்கு ரூ.6.50 வழங்கி வருகின்றனா். ஒரு கோழி 40 நாள்களில் ஒன்றரை முதல் 2 கிலோ வரை எடை கொண்டதாக வளா்ச்சி பெறும்.
தற்போதைய விலைவாசி உயா்வால் நட்டம் ஏற்படுவதால் கிலோ கறிக்கோழிக்கு 12 ரூபாய் வழங்க வேண்டும் எனக் கூறி அரியலூா் மற்றும் கடலூா் மாவட்ட தமிழ்நாடு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலச்சங்கம் சாா்பில், ஜயங்கொண்டம் பகுதியில் உள்ள 5 தனியாா் நிறுவனங்களின் மேலாளா்களிடம் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் கோரிக்கை மனு அளித்தனா்.