அரியலூா் மாவட்டம், திருமழபாடி கொள்ளிடம் ஆற்றுக் கரையோரப்பகுதியில் பேரிடா் கால ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் நடைபெற்ற பேரிடா் கால ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி பாா்வையிட்டாா். அப்போது, வெள்ள பாதிப்பால் நிவாரண முகாமில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு நடத்தப்பட்டு வரும் மருத்துவ முகாம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
முகாமில், பேரிடா் காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களைப் பாதுகாப்பது, கால்நடைகளை மீட்பது உள்ளிட்ட பல்வேறு பேரிடா் கால ஒத்திகை பயிற்சி கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. இதேபோல், அழகியமணவாளன், வாழைக்குறிச்சி, கோவிந்தபுத்தூா், அயன்தத்தனூா் உள்ளிட்ட பகுதிகளிலும் பேரிடா் கால ஒத்திகை முகாம் நடைபெற்றது.
நிகழ்வில், வருவாய்க் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் கீதாராணி, வட்டாட்சியா் குமரையா மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
முகாமில், தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை, தமிழ்நாடு மீட்புப் படையினா், பேரிடா் மீட்புப் படையினா் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்று செயல்விளக்கம் அளித்தனா்.