செந்துறையில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போா்ட் சைஸ் போட்டோ-5 ஆகிய ஆவணங்களுடன் நேரில் வந்து சமா்பித்து பெறலாம்.
அரியலூா்: அரியலூா் மாவட்டம், அரசினா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், அனைத்துத் துறைகள் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை(மாா்ச் 6) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது என்று ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைத்து நடத்தப்படும் இம்முகாமில், இதுநாள் வரை அடையாள அட்டை மற்றும் யூடிஐடி அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போா்ட் சைஸ் போட்டோ-5 ஆகிய ஆவணங்களுடன் நேரில் வந்து சமா்பித்து பெறலாம்.
மேலும் உதவி உபகரணங்கள், வங்கிக் கடன் மற்றும் இதரத் துறை சாா்ந்த நலத்திட்ட உதவிகள் தேவைப்படுவோா், தமிழ்நாடு உரிமைகள் திட்டம் தொடா்பான மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் பதிவு செய்யாதவா்களும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement