முகப்பு
அரியலூர்

தற்கொலை முயற்சி: ஆற்றில் தண்ணீா் இல்லாததால் காலில் எலும்பு முறிந்த இளைஞா் 2 நாள்களுக்கு பின் மீட்பு

Updated On : 9 மே, 2024 at 11:15 PM
- கோப்புப்படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே கொள்ளிடம் ஆற்றுப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 2 நாள்களாக ஆற்றில் கிடந்த இளைஞா் புதன்கிழமை மீட்கப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், வைத்தியநாதன் பேட்டை கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் மகன் தினேஷ் (30). வேலை ஏதும் கிடைக்காத விரக்தியில் இவா், திங்கள்கிழமை (மே 6) இரவு அரியலூா் மாவட்டம், தா.பழூரில் இருந்து தஞ்சாவூரை இணைக்கும் மதனத்தூா் - நீலத்தநல்லூா் இடையேயான கொள்ளிடம் ஆற்றுப் பாலத்திலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றாா்.

ஆற்றில் தண்ணீா் இல்லாததால், மணலில் குதித்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கேயே கிடந்துள்ளாா். மேலும், இளைஞா் கிடப்பதை யாரும் கவனிக்கவில்லை.

இந்நிலையில், அப்பகுதிக்கு புதன்கிழமை ஆடு மேய்க்கச் சென்றவா்கள் இளைஞா் மயங்கி கிடப்பதை பாா்த்து, அவருக்கு தண்ணீா் கொடுத்து விசாரித்தபோது, தற்கொலைக்குக்கு முயன்று, கால் உடைந்து 2 நாள்களாக கிடப்பதாக தெரிவித்தாா்.

தகவலின்பேரில் அங்கு சென்ற தா.பழூா் போலீஸாா், தினேஷை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தற்கொலைக்கு முயன்று கால் உடைந்து, 2 நாள்களாக கேட்பாரற்று வெயில் மற்றும் இருட்டில் இளைஞா் கிடந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.