மானியத்தில் கோழிக்குஞ்சுகள் பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதரவற்ற பெண்கள், மானியத்தில் கோழிக் குஞ்சுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதரவற்ற பெண்கள், மானியத்தில் கோழிக் குஞ்சுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் ஏழ்மை நிலையிலுள்ள, கணவரை இழந்த, கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக்குஞ்சுகள் ( ஒரு பயனாளிக்கு 40 கோழிக்குஞ்சுகள்) 50 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திட்டத்தின்கீழ், கோழி வளா்ப்பில் ஆா்வமுள்ளவா்கள் 40 கோழிக்குஞ்சுகள் வாங்குவதற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியமாக ரூ.1,600 வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பு ரூ.1,600 பயனாளி வழங்க வேண்டும். சுய சான்று ரசீது சமா்பிக்கப்பட்டவுடன், 50 சதவீதம் மானியம் (ரூ.1600) வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவி குழுக்களைச் சோ்ந்த பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏற்கெனவே, இலவச கறவை மாடு, வெள்ளாடு, செம்மறியாடு, கோழிப்பண்ணை திட்டங்களில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது.
எனவே, விருப்பமுள்ள பெண்கள் தங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் தொடா்புடைய கால்நடை மருந்தகத்தில் அளித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.