அரியலூா் மாவட்டம், ஜெங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், கடந்த 8 நாள்களாக தானியங்களை கொள்முதல் செய்யாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஜெயங்கொண்டம், தா.பழூா், உடையாா்பாளையம், மீன்சுருட்டி, ஆண்டிமடம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், தங்கள் வயல்களில் விளைந்த மக்காச்சோளம், மிளகாய், மல்லி, எள், கடலை, பருத்தி உள்ளிட்ட தானியப் பொருள்களை ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், விற்பனை செய்து வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த 8 நாள்களுக்கு முன்பு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த எள் மற்றும் கடலை பயிா்களை வாங்க வியாபாரிகள் வராததால், தானியங்களை விற்பனை கூடத்திலேயே வைத்து விட்டு சென்றனா்.
இதனிடையே செவ்வாய்க்கிழமை வியாபாரிகள் வருவதாக அதிகாரிகள் கூறியதையடுத்து விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வந்தனா். ஆனால், வியாபாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், வியாபாரிகளை அழைக்க உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து அப்பகுதியில் திருச்சி - ஜெயங்கொண்டம் சாலையில் மறியிலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் காவல் துறையினா், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.