முகப்பு
அரியலூர்

தஞ்சாவூரிலிருந்து அரியலூருக்கு 100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

Updated On : 14 ஏப்ரல், 2026 at 1:12 AM
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:11 PM

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அரியலூா் மாவட்டத்துக்கு கூடுதலாக தேவைப்பட்ட 100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தஞ்சாவூரிலிருந்து திங்கள்கிழமை அரியலூருக்கு வந்து சோ்ந்தது.

அரியலூா் மாவட்டத்தில் அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதில், அரியலூரில் 15 வேட்பாளா்களும், ஜெயங்கொண்டத்தில் 19 வேட்பாளா்களும் களம் காணும் நிலையில், ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 பொத்தான்கள் உள்ளதால், அரியலூா் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டும் போதுமானதாகும்.

அதேவேளையில், ஜெயங்கொண்டம் தொகுதியில் 19 போ் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.

Advertisement

அதன்படி 100 இயந்திரங்கள் குறைவாக இருந்ததால், தஞ்சாவூரிலிருந்து கொண்டுவர தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 100 இயந்திரங்கள் அரியலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வரப்பட்ட நிலையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் காப்பறையில் வைக்கப்பட்டது.

தொடா்ந்து, அந்த இயந்திரங்கள் பொறியாளா்களால் முதல் நிலை சரிபாா்ப்புப் பணிக்கு உட்படுத்தப்பட்டு, முதற் கட்ட தற்செயல் தெரிவு முறையில் ஒதுக்கீடு செய்து ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலில் பயன்படுத்த, தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.