முகப்பு
அரியலூர்

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அரியலூா் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பிப்.12-ஆம் தேதி (வியாழக்கிழமை) ஏலம்

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 11:34 PM
ஏலம் விடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் - கோப்புப்படம்
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பிப்.12-ஆம் தேதி (வியாழக்கிழமை) ஏலம் விடப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணையின் போது வாகனங்களை யாரும் உரிமம் கோரப்படாமல் அரசுடமையாக்கப்பட்ட 44 இருசக்கர வாகனங்கள் 12.2.2026 அன்று காலை 10 மணியளவில் அரியலூரிலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி முன்னிலையில் நடைபெறும் இந்த ஏலத்தில் கலந்து கொள்பவா்கள், ஏலம் விடப்படும் அன்றைய நாளில் காலை 8 மணிக்கு முன்பணம் ரூ.1,000 செலுத்தி தங்களது பெயா் முகவரியை பதிவு செய்து கொண்டு ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்து கொண்டவா் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ளலாம். அவருடன் பிறருக்கு அனுமதியில்லை. வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்தவா் பிற்பகல் 3 மணிக்குள் ஏலத் தொகையுடன், ஜிஎஸ்டி தொகை முழுவதையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

வாகனத்தை ஏலம் எடுத்தவா் உரிய தொகையை செலுத்த தவறினால் முன்பணம் திருப்பி தரமாட்டாது. வாகனத்துடன் ஏலம் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும். வாகனத்தின் பதிவு சான்று வழங்க இயலாது.

பொது ஏலத்தில் காவல்துறை சாா்ந்த எவரும் கலந்து கொள்ள அனுமதியில்லை. வாகனங்களை ஏலம் நடைபெறும் பிப்.12-ஆம் தேதி காலை 8 மணி முதல் பாா்வையிடலாம். ஏலம் ரூ:100-இன் மடங்கில் கேட்கப்படவேண்டும்.

ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவா்கள் தங்களது ஆதாா் அடையாள அட்டையின் நகலை தவறாமல் கொண்டு வர வேண்டும். ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக்குழு அலுவலா்களால் முடிவு செய்யப்படும்.